வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் க. ஜெசீதன், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நேற்றைய பிரதேச சபை அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் யார் எங்கு அமர வேண்டும் என்பது குறித்து பேசும் அருச்சுனா, தாமே முன்பு எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்ததை மறந்துவிட்டாரா என கேள்வி எழுப்பினார்.
சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தாம் ஆசனத்துக்காக சண்டையிட்டதாக கூறப்படுவது உண்மையல்ல என்றும், தமக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தால் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரை நேரடியாக காண முடியாத சூழல் இருந்ததால் இடமாற்றம் கோரியதாகவும் விளக்கினார்.
சுற்றுநிருபத்தின் படி, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவர், பிரதேச செயலர் மற்றும் அந்தப் பிரதேசத்தின் தவிசாளர் முன்னிலையில் அமர வேண்டும் என்ற நடைமுறை இருப்பதாகவும், அது தமிழர் பகுதிகளில் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பிரச்சினை எழுந்தபின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தமக்கான ஆசனத்தை அருகில் வழங்கியதாகவும், அதன்பின்னர் அருச்சுனா தம்மை அங்கிருந்து அகற்றும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டதாகவும் ஜெசீதன் தெரிவித்தார்.
மேலும், டித்வா புயல் பாதிப்புகள், மாதகல் நரியோடை வீதி புனரமைப்பு (2.4 மில்லியன் ரூபா), மற்றும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல விடயங்களில் தாம் கேள்வி எழுப்பியபோது, அருச்சுனா குறுக்கிட்டு ஒருங்கிணைப்பு குழுத் தலைவரை பாதுகாத்ததாகவும் குற்றம்சாட்டினார்.இவ்விடயங்கள் தொடர்பில் இதுவரை அருச்சுனா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.
