மன்னார் மாவட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்று (21) காலை கருப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பின்னர் அவர்கள் மன்னார் மாவட்டச் செயலகம் முன்பாக இருந்து மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
கடந்த 14ஆம் திகதி கடமைக்குச் சென்ற குடும்ப நல உத்தியோகத்தர் ஒருவர் வழிமறிக்கப்பட்டு, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி அபகரிக்கப்பட்டதுடன், அவருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தை கண்டித்தும், தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது.காலை 9.30 மணியளவில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலிருந்து பஜார் பகுதி வரை பதாகைகள் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்ற குடும்ப நல உத்தியோகத்தர்கள், பின்னர் மாவட்டச் செயலகம் முன் அமைதியான கண்டனத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ச்சியாக நகைப் பறிப்பில் ஈடுபடும் கும்பலை கைது செய்ய வேண்டும், பெண்கள் தனியாகச் செல்லும் பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும், நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்கள் அச்சமின்றி வாழ வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
மன்னார் நகரின் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்கள் பெண்களின் நகைகளை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இதுவரை நான்கு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பெண்கள் வெளியில் தனியாகச் செல்ல அச்சமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.




