வடமராட்சி ஊடக இல்லம், ஊடகவியலாளர் சு. இராமச்சந்திரன் உள்ளிட்ட காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விடயத்தில் சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என வலியுறுத்தியுள்ளது.
சு. இராமச்சந்திரன், 15.02.2007 அன்று துன்னாலை கலிகை சந்தியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதன் 19ஆவது ஆண்டு நினைவாக, இன்று (21) காலை பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் போது மகஜரும் வாசிக்கப்பட்டது.
அந்த மகஜரில், இராணுவத்தினரும் அக்காலத்தில் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக் குழுக்களும் இணைந்து இடம்பெற்ற கைது மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு இதுவரை உரிய நீதி வழங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பரணகம ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகளில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும்இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இராமச்சந்திரன் கைது செய்யப்பட்ட பின்னர் சில நாட்கள் தொலைபேசி மூலம் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்ததாகவும், தாம் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது அவரது பெற்றோர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரே சாட்சியாக சகோதரி மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2004–2010 காலகட்டத்தில் 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் உள்ளனர் எனவும், தமிழ் ஊடக நிறுவனங்கள் மீது பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால், மீதமுள்ள சாட்சிகள் மௌனமாகுமுன், சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் வகையில் சுயாதீன சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மகஜரின் பிரதிகள் ஐ.நா. உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளுக்கும் அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
