துப்பாக்கிச் சூடு நடத்தி மனிதக் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த இரு சந்தேக நபர்களை களுத்துறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 மற்றும் 27 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் களுத்துறை வடக்கு மற்றும் போம்புவல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் பதிவாகியிருந்த இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, களுத்துறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அதன்படி, நேற்று (19) காலை இக்குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட உந்துருளியின் நிறத்தை மாற்றித் தன்வசம் வைத்திருந்தமை, துப்பாக்கியைக் கடத்தியமை மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து குறித்த உந்துருளியில் இருந்து அகற்றப்பட்ட பாகங்கள், நிறத்தை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், ஒரு ஜோடி போலி இலக்கத் தகடுகள் மற்றும் போலி வருமான வரி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட பொருட்கள் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக களுத்துறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
