முல்லைத்தீவு மாவட்டம், கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து தம்மை நீக்கி, அதற்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தடுக்கக் கோரி முன்னாள் தவிசாளர் சின்னராசா யோகேஸ்வரன் தாக்கல் செய்த வழக்கு இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மூலம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கின் ஆரம்ப கட்டத்தில், விசாரணை நிறைவடையும் வரை தமது பதவிக்குப் பிறிதொரு உறுப்பினரை நியமிப்பதைத் தடுக்க இடைக்காலத் தடை உத்தரவை மனுதாரர் பெற்றிருந்தார்.இன்று வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, எதிர் மனுதாரரான தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திரா அனுசரணையுடன் சட்டத்தரணி நிரான் அங்கிட்டல் முன்னிலையாகி வாதிட்டார்.
இவ்வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சின்னராசா யோகேஸ்வரனின் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், ஏற்கனவே பதவியில் இருந்து விலக்கப்பட்ட யோகேஸ்வரனின் இடத்துக்கு புதிய உறுப்பினரை நியமிக்கும் அதிகாரம் தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
