ஏறாவூர் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் கழிவு மூட்டைகள், தளவாய் பகுதியில் உள்ள ஆலயங்கள், பிரதான வீதிகள் மற்றும் மக்கள் வாழும் இடங்களில் வீசப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறு செயற்படும் மர்ம நபர்களை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் முன்வைத்த புகார்களைத் தொடர்ந்து சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
சிலர் கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி கழிவுகள் மற்றும் மலக் கழிவுகளை மூட்டைகளில் கட்டி தளவாய் பகுதிகளில் வீசிவிட்டு செல்வதாக கூறினார். இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும், இந்து ஆலயங்களின் புனிதத் தன்மைக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இவ்வாறான செயற்பாடுகளை ஏற்க முடியாதது என்றும், அபராதம் விதிப்பதுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதேச சபை தவிசாளர் ஊடாக ஏறாவூர் நகர சபைக்கு தகவல் வழங்கப்படவுள்ளதாகவும் கூறினார்.மேலும், அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும். கோழிப் பண்ணை தொடர்பிலும், வீதி விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் கழிவுகள் வீசப்படுவதாகவும், கழிவு அகற்றும் வாகனங்கள் முறையாக வராததால் கழிவுகள் தேங்கி கிடப்பதாகவும் தளவாய் மீனவர் சங்கமும் ஆலய நிர்வாகத்தினரும் கவனம் ஈர்த்துள்ளனர்.
இனிவரும் காலங்களில் இவ்வாறான செயல்களைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன், குற்றவாளிகளை அடையாளம் காண பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் பிரதேச சபைமூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.



