வட்டவளை பகுதியில் 20 அடி பள்ளத்தில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டனில் இருந்து தங்கொட்டுவ நோக்கி பயணித்த லொறி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் முதலில் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், வட்டவளை சிங்களக் கல்லூரிக்கு அருகில் (21) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றதாக வட்டவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை பரிசோதகர் சந்தன கமகே மஹாகா தெரிவித்தார்.எதிர் திசையில் வந்த மற்றொரு லொறியுடன் நேருக்கு நேர் மோதல் ஏற்படவிருந்ததைத் தவிர்க்க முயன்றபோது, முதற்கண் லொறி பிரதான வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் இருந்த ஒரு பயணி, விபத்தைப் பார்க்க இறங்கிச் செல்ல முயன்றபோது தவறி விழுந்து பேருந்தின் முன்சக்கரத்தின் கீழ் கால் சிக்கியதால் பலத்த காயமடைந்துள்ளார்.
அவரும் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இரு சம்பவங்கள் தொடர்பாக வட்டவளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.



