இலங்கைக்கான தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஸ்டீபன் தோமஸ் கோஹ்லர், அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதி, நேற்று வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சில், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையிலான தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் மற்றும் அண்மைக்கால பாதுகாப்பு முன்னேற்றங்கள் தொடர்பாக விரிவான மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.குறிப்பாக, ‘டித்வா’ சூறாவளி அனர்த்தத்தின் போது அமெரிக்கா வழங்கிய உடனடி மனிதாபிமான உதவிகளைப் பிரதி அமைச்சர் பாராட்டினார். அமெரிக்க விமானப்படையின் 36-வது அவசரக்கால பதிலளிப்பு குழுவின் மூலம் இரண்டுC-130J சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்களும் விமானப்படை வீரர்களும் பயன்படுத்தப்பட்டு வழங்கப்பட்ட வான்வழிப் போக்குவரத்து உதவிகள், இலங்கையின் மீட்புப் பணிகளில் முக்கிய பங்காற்றியதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இத்தகைய அவசரநிலைகளை ஒரு திருப்புமுனையாகக் கொண்டு சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த அமெரிக்கா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்குப் பிரதி அமைச்சர் நன்றி தெரிவித்தார். இதன் அடிப்படையில், அமெரிக்காவால் வழங்கப்பட்ட நான்கு கடலோர பாதுகாப்புகப்பல்கள், பீச்கிராப்ட் கிங் எயார் விமானம், ‘பிளீட் பிராட்பேண்ட்’ (FleetBroadband) செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு மற்றும் 10 பெல் TH-57 பயிற்சி ஹெலிகள் ஆகியவற்றின் பங்களிப்பையும் அவர் நினைவுகூர்ந்தார்.
இதற்கு பதிலளித்த அட்மிரல் கோஹ்லர், இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நான்காவது கடலோர பாதுகாப்பு கப்பல் இன்று சனிக்கிழமை அமெரிக்காவிலிருந்து இலங்கையை நோக்கிப் புறப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.இறுதியாக, இந்தோ–பசுபிக் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் போது, நாடுகளின் இறையாண்மையை மதிப்பதே மிகவும் முக்கியமானது என்ற கருத்தில் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.
நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற அட்மிரல் கோஹ்லர், 2024 ஏப்ரல் 4ஆம் திகதி அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதியாகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச இராணுவ நடவடிக்கைகளில் அவர் தலைமைத்துவம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


