யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கல்லுண்டாய் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஒன்று, வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் இன்று (20.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
கல்லுண்டாய் பகுதியில் குடியேற்றப்பட்டுள்ள மக்கள் ஒவ்வொரு மழைக் காலத்திலும் வெள்ளப் பெருக்கினால் இடம்பெயர வேண்டிய துரதிர்ஷ்டநிலையை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.இது தொடர்பில் இலங்கை பொறியியலாளர் சங்கம் வடக்கு மாகாணக் கிளையினரால் விசேட திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், நிலம் நிரப்புதல் தொடர்பான ஆரம்பகட்ட ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கலந்துரையாடலின் போது, அருகிலுள்ள கொத்துக்கட்டிக்குளம் தூர்வாரப்பட்டு, அங்கிருந்து பெறப்படும் மண்ணைப் பயன்படுத்தி கல்லுண்டாய் குடியேற்றப் பகுதியில் நிலம் நிரப்பும் பணிகளை முன்னெடுப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மேலும், குடியேற்றப் பகுதிக்கு அண்மையில் செல்லும் வாய்க்காலைத் தூர்வாருவதும் அவசியம் எனக் குறிப்பிடப்பட்டது.
அத்துடன், கொத்துக்கட்டிக்குளம் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்த பின்னர், அதன் பராமரிப்புப் பொறுப்பை வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு ஒப்படைக்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டது.இவ்விடயங்கள் தொடர்பில் இலங்கை பொறியியலாளர் சங்கம் வடக்கு மாகாணக் கிளை, சண்டிலிப்பாய் பிரதேச செயலகம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை மற்றும் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் ஆகியவை இணைந்து விரைவான திட்ட மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஆளுநர் பணிப்புரை வழங்கினார்.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், இணைப்புச் செயலாளர்கள், யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர் மற்றும் தொடர்புடைய அரசியல் நிர்வாக பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.


