தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை, இன அழிப்புப் போரில் ஈடுபட்ட இராணுவத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்தும் அடையாளமாகும் எனத் தெரிவித்து, இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு காணிகளை இழந்த மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல் நடைபெற்றதாக குறிப்பிட்டார். குறித்த கலந்துரையாடலில் பௌத்த சாசன அமைச்சின் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் விகாராதிபதி கலந்து கொண்டபோதும், காணிகளை இழந்த மக்கள் அழைக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கும் அரசுக்கும் அல்லது பௌத்த மதத்திற்கும் தொடர்பில்லை என்றும், இந்த ஆக்கிரமிப்பை மேற்கொண்டது இலங்கை இராணுவம் என்பதையே சுட்டிக்காட்டினார். அக்காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா இந்த விகாரை அமைப்பதில் முழுமூச்சாகச் செயற்பட்டதாகவும் அவர் கூறினார்.
“இன அழிப்பில் ஈடுபட்ட இராணுவத்தின் மற்றொரு கோரமுகமே தையிட்டி திஸ்ஸ விகாரை. எனவே, அரசு இந்த விவகாரத்தில் நீதியான முறையில் தலையிட்டு, காணி உரிமைகளை மக்களுக்கே மீள வழங்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், மக்களின் காணிகளை மக்களுக்கே வழங்குவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, இவ்வாறான செயல்களுக்கு துணைபோகக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
