இந்தியா–மத்திய கிழக்கு–ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் (IMEC) கீழ், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவனம், மார்சேய் ஃபோஸ் துறைமுகம் உடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியப் பயணத்தின் போது கையெழுத்தான இந்த ஒப்பந்தம், இந்தியா–ஐரோப்பா வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு டெல்லி நகரில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் அறிமுகமான IMEC வழித்தடம், கடல், ரயில், டிஜிட்டல் மற்றும் தூய்மையான எரிசக்தி உள்கட்டமைப்புகளை ஒருங்கிணைக்கும் பன்முகப் போக்குவரத்து திட்டமாகும். தடையற்ற வர்த்தகப் போக்குவரத்தை எளிதாக்குதல் மற்றும் துறைமுகங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் இதன் நோக்கமாகும்.
ஒப்பந்தத்தின் படி, முந்த்ரா துறைமுகம் மற்றும் ஹசிராதுறைமுகம் இந்தியா–மேற்கு ஆசியா இணைப்புக்கான கிழக்கு நுழைவாயில்களாக அமையும்; மார்சேய் ஃபோஸ் துறைமுகம் ஐரோப்பாவிற்கான மேற்கு நுழைவாயிலாகச் செயல்படும். சுமார் 70 மில்லியன் டன் கூடுதல் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட இந்த இணைப்பு, இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்தும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.
