ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு முன்னாள் தலைவருமான அனுஷ் பல்பிட்ட, ஊழல் குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் நேற்று பிணையில் விடுவித்தது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுது அவர் கூறியது:
“தற்போதைய அரசில் எவ்வித திட்டமிடலும் இல்லை. அனுபவமிக்க அரச அதிகாரிகளை இலக்கு வைத்து, அவர்களுக்கு எதிராக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டமைப்பையும் அரசு சீர்குலைத்துள்ளது. இதனால் நேர்மையான அதிகாரிகள் அச்சத்துடன் பணியாற்றும் சூழல் உருவாகியுள்ளது.
எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை. சட்டத்தின் மீதும் நீதிமன்றத்தின் மீதும் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. ஆனால், அரசியல் காரணங்களுக்காக அதிகாரிகளை நீதிமன்றக் கூண்டில் ஏற்றுவது கவலைக்குரிய விடயமாகும்.
பழைய சம்பவங்களை கிளறிப் பார்ப்பதை விட, தற்போதைய பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மக்களை காப்பாற்றும் வேலைத்திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும். பழிவாங்கும் அரசியலால் நாட்டை முன்னேற்ற முடியாது,” என அனுஷ பல்பிட்ட வலியுறுத்தினார்.
