அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு நேற்று இரவு புதுடில்லியில் நடைபெற்றது.
புதுடில்லியில் அமைந்துள்ள பாரத் மண்டபம் மண்டபத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய இணக்கப்பாடு குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
சந்திப்பைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய விசேட இரவு விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டார்.இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று, புதுடில்லியில் நடைபெற்று வரும் AI Impact Summit 2026 சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்தியா பயணமானார்.
ஐந்து நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டின் இன்றைய அமர்வில் கலந்துகொண்ட அவர், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மனித குல நலனுக்காகவும் பொறுப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார்.மேலும், சர்வதேச தொழில்நுட்ப ஆளுமை மற்றும் அதன் சவால்களை எதிர்கொள்வது தொடர்பாகவும் முக்கிய கருத்துகளை முன்வைத்தார்.
உலக நாடுகளின் அரசத் தலைவர்கள் மற்றும் சர்வதேச தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மாநாட்டில், சுமார் 20 நாடுகளின் தலைவர்களும், 45-க்கும் மேற்பட்ட நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.
