அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தத்தில் இணைவதற்கு வலியுறுத்தி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க தலைநகரில் நடைபெற்ற அமைதிப் பேரவையின் தொடக்கக் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார். ஈரான் புதிய ஒப்பந்தத்திற்கு இணங்காவிட்டால் மிகவும் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்த அவர், இதற்காக 10 முதல் 15 நாட்கள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அடுத்த பத்து நாட்களில் இதுகுறித்து பல தகவல்கள் வெளியாகும் என்றும், வழங்கப்பட்ட காலம் போதுமானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஈரான் தரப்பும் கடுமையான பதிலடி எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் குறிவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கு ஈரான்கடிதம் அனுப்பி, தாம் தன்னிச்சையாகப் போரைத் தொடங்கமாட்டோம் எனவும், ஆனால் இராணுவ ஆக்கிரமிப்பு அல்லது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் தற்காப்பு உரிமையின் அடிப்படையில் பதிலடி வழங்கும் உரிமை உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
