வடக்கு மாகாண இளைஞர்களிடையே சிவில் விமானப் போக்குவரத்துத் துறையைப் பற்றிய கல்வியை ஊக்குவிப்பது நோக்கமாக, விசேட உயர்மட்டக் கலந்துரையாடலும், அதன்பின்னர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி களப் பயணமும் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக, பிரதி அமைச்சர் பொறியியியலாளர் ஜனித்த ருவன் கொடித்துவ, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சுனில் ஜயரத்ன், பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கப்டன் தமிந்த் ரம்புக்வெல்ல ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்குழுவினரை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.அதனைத் தொடர்ந்து, ஆளுநர் செயலகத்தில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் இளைஞர்களுக்கான கல்வி முன்னெடுக்கல் குறித்த விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது.
கலந்துரையாடலுக்குப் பிறகு, குழுவினர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு நேரில் சென்று அங்கு அன்றாட சேவைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடமிருந்து விளக்கமறிந்தனர். விமான நிலையத்தின் தற்போதைய தேவைகள், கட்டுமானப் பணிகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.





