கேகாலை மாவட்டம், தெரணியகலை – மாலிபொட தேயிலைத் தொழிற்சாலைப் பிரிவில் இடம்பெற்ற குடும்பத் தகராறு கொலைச் சம்பவமாக மாறியுள்ளது.
மாலிபொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய, ஒரு பிள்ளையின் தந்தையான நபர், தனது மாமனாரின் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை உயிரிழந்த நபருக்கும் அவரது மாமனாருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தீவிரமடைந்த நிலையில், ஆத்திரமடைந்த மாமனார் மருமகனை கத்தியால் குத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
படுகாயமடைந்த நபர் உடனடியாக தெரணியகலை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் கூறுகின்றன.
உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்திற்குப் பின்னர் சந்தேகநபரான மாமனார் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளை தெரணியகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
