மட்டக்களப்புவில் இன்று (21) சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு, அனைத்து இன மக்களும் கலந்துகொண்ட உணவு கண்காட்சி நடைபெற்றது.
“உணவின் மொழி வழியாக உள்ளூர் உணவுகளின் மடைபரவல்” என்ற தொனிப்பொருளில், இந்நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழகம் அரசடி பகுதியில் உள்ள தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் கைத்தொழில் மற்றும் சமூக இணைப்பு மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மட்டக்களப்பில் வாழும் அனைத்து இன மக்களின் பாரம்பரிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன.இந்நிகழ்வு பேராசிரியர் சி. ஜெய்சங்கர் அவர்களின் ஒழுங்கமைப்பிலும், கிழக்கு பல்கலைக்கழக மத்திய நிலைய பணிப்பாளர் டாக்டர் அருளானந்தம் அவர்களின் தலைமையிலும் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பி. பிரதீபன் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
மூத்தோரின் நினைவுகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் உருவான பாரம்பரிய, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் வேடுவ சமூகம், இஸ்லாமிய சமூகம், இந்து சமூகம், பறங்கி சமூகம் மற்றும் சிங்கள சமூகம் உள்ளிட்ட அனைத்து இன மக்களின் பண்டைய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன.பெருமளவான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டு உணவுகளை சுவைத்து மகிழ்ந்தனர்.




