ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எவரேனும் பாதாள உலகச் செயற்பாடுகள் அல்லது போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களாக இருந்தால், அவர்களுக்கு எதிராக தயக்கமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை, நிலையியற் கட்டளை 27(2)ன் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோது, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இருவர் தொடர்புடையதாகத் தெரிவித்ததுடன், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என அவர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.இதற்கு பதிலளித்து உரையாற்றிய சஜித் பிரேமதாஸ,
“எமது கட்சி ஒருபோதும் பாதாள உலகச் செயற்பாடுகளுக்கு துணைபோவதோ அல்லது அதனை ஊக்குவிப்பதோ இல்லை. கொலை, கொள்ளை, மோசடி உள்ளிட்ட எந்தவொரு சட்டவிரோதச் செயல்களையும் நாம் ஏற்றுக்கொள்வதில்லை; அவற்றை முழுமையாக நிராகரிக்கின்றோம்.
எமது கட்சியைச் சேர்ந்த யாராவது இவ்வாறான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களாக இருப்பதாக உறுதியான சான்றுகள் இருந்தால், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட வேண்டும். நீதியை நிலைநாட்டும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எமது முழு ஆதரவு இருக்கும்,” என சபையில் தெரிவித்தார்.
