காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எங்களுடைய நாட்டிலே வடக்கு மாகாணம் என்பது வெங்காயம், உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கையிலே ஒரு பாரிய பங்களிப்பை கடந்த காலங்களிலே செய்த ஒரு மாகாணம்.ஆனால் அந்த மாகாணத்திலே இப்போது இந்தப் பயிர்ச்செய்கை பல விதத்திலும் பாதிக்கப்பட்டு ஒரு நலிவுற்ற பயிர்ச்செய்கையாக இருக்கிறது.
இவ்வாறு இறக்குமதிகளுக்கு வரியை விதிப்பதன் ஊடாக இறக்குமதியை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் அரசாங்கத்துக்கான வரி விதிப்பின் ஊடாக பெறப்படுகின்ற வருமானம் ஏற்படுவதோடு, உள்நாட்டு உற்பத்தியை பெருக்குகின்ற ஒரு உத்தியாக இதை நாங்கள் பார்க்கலாம்.
ஆனால் நாங்கள் இவ்வாறான உணவுப் பொருட்களுக்கு எங்களுடைய நாட்டிலே தன்னிறைவை ஏற்படுத்தக்கூடிய வகையிலே வரி விதிப்பு மாத்திரம் அதற்கு உறுதுணையாக இருக்காது.ஒரு பொருளுக்குரிய வரி விதிக்கப்படும்போது அதில் இரண்டு பக்கங்களையும் நாங்கள் பார்க்க வேண்டும்.
ஒன்று, இந்த வரி விதிப்பால் உள்நாட்டு உற்பத்தியை கூட்டுகின்ற போது விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற இலாபம்.அதேபோல வரி விதிப்பின் ஊடாக நுகர்வோருக்கு ஒரு பாரிய சுமையை, செலவை ஏற்படுத்துகின்ற அடுத்த பக்கத்தையும் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.
எங்களுடைய நாட்டைப் பொறுத்தவரையிலே உற்பத்தியாளர்களைப் பார்த்தீர்களானால் அவர்களுடைய உற்பத்தியைப் பெருக்குவதற்கு பல விடயங்களை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
உதாரணமாக, இந்த உற்பத்தியாளர்கள்; இந்த நாடு தன்னிறைவு அடைய வேண்டுமாக இருந்தால் அவர்களுக்கான பல உதவிகளை இந்த அரசாங்கம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.அந்த வகையிலே இந்த உற்பத்தியாளர், விவசாயிகளுக்கான மானியம் மிகவும் முக்கியமான ஒரு விடயம்.
கடந்த பெரும் போகத்தில் கூட நெல்லுக்கான உர மானியத்தைப் பெற வேண்டிய எமது விவசாயிகள், வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் தற்போது 85 வீதமான அறுவடை முடிந்துவிட்டது.எனினும் இன்றுவரை அவர்களுக்கான உர மானியம் கிடைக்கவில்லை.
இவ்வாறிருக்குமாக இருந்தால் எவ்வாறு நாங்கள் இந்த நாட்டினுடைய உற்பத்தி பொருளாதாரத்தை பெருக்குவது என பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
