வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் செயலாளர் என்.எம். ஆலம், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை மீறி தொழில் செய்வது குற்றச் செயலாகும் என்றும், அதனை தொடர்ந்து செய்து கொண்டு தங்களுக்கு நியாயம் கோருவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்தார்.மன்னார் அலுவலகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை மீறி கரையோரம் வரை வந்து தொழிலில் ஈடுபடுகின்றனர் என குற்றம்சாட்டினார்.
அண்மையில் காரைக்கால், பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் 6 படகுகள் மற்றும் 47 பேர் (25 பேர் ஒரு குழுவாகவும், 22 பேர் ஒரு குழுவாகவும்) கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும், நூற்றுக்கணக்கான படகுகள் எல்லை மீறி வருவதாகவும், அவ்வப்போது சில படகுகள் மட்டுமே கைது செய்யப்படுவது போதுமான நடவடிக்கையல்லஎன்றும் தெரிவித்தார்.
இலங்கை கடல் எல்லை ஒரு இறையாண்மை கொண்ட பகுதி என்பதால், அதை மீறி நுழையும் போது கைது தவிர்க்க முடியாதது என அவர் வலியுறுத்தினார்.
மேலும், எல்லை மீறி வருவது மட்டுமல்லாமல், கடல் வளங்களை சுரண்டுதல், உபகரணங்களை சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.கைது செய்யப்பட்ட பின்னரும், மீனவர்களை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் தெரிவித்தார்.
குற்றச் செயலை செய்து விட்டு அதை நியாயப்படுத்த முடியாது என்றும் கூறினார்.தமிழக அரசும், இந்திய மத்திய அரசும் இந்த விடயத்தில் தலையிட்டு எல்லை மீறலைத் தடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இந்திய மீனவர் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
