அவிசாவளை – ஹட்டன் பிரதான வீதியின் எட்டியாந்தோட்டை, தனகொலவத்த பகுதியில் நேற்று (20) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருடன் இருந்த மூன்று பிள்ளைகளும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் தெரிவிப்பதன்படி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை விமான நிலையத்தில் இறக்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மின் கம்பத்துடன் மோதியுள்ளது. பின்னரும் வேகம் குறையாத அந்தப் பேருந்து, மின் கம்பத்தை உடைத்துக்கொண்டு வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வீடொன்றின் பக்கத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து இடம்பெற்ற சமயத்தில், உயிரிழந்த பெண் தனது மூன்று பிள்ளைகளுடன் மாலை நேர வகுப்பிற்குச் செல்வதற்காக வீதியோரத்தில் பேருந்துக்காக காத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அவர்கள் நால்வர் மீதும் மோதி கவிழ்ந்துள்ளது.
இவ்விபத்தில் மேலா சதுராணி குலதுங்க (46) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிபவர் எனத் தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த மூன்று பிள்ளைகளும் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பாக பேருந்தின் சாரதி எட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்த பெண்ணின் சடலம் கரவனெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
