தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை தொடர்பான காணி விவகாரத்தில் பௌத்த சாசன அமைச்சு பாரபட்சமான முறையில் செயற்படுகின்றது என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,
“திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட எமது காணிகளை மீள எமக்கு ஒப்படைக்குமாறு வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றோம்.
இவ்விடயம் தொடர்பாக கொழும்பில் கடந்த புதன்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. எனினும், அந்தப் பேச்சுவார்த்தைக்கு எமக்கு எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை.
எமது காணிகள் எமக்குச் சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்தும் அனைத்து சட்டப்பூர்வ ஆவணங்களையும் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளோம். இருந்தபோதிலும், எமது கருத்துகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படாமல் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
எம்மை அழைக்காமல், எமது காணிகளை ஆக்கிரமித்ததாக குற்றஞ்சாட்டப்படும் விகாராதிபதியை அழைத்து கலந்துரையாடல் நடத்துவது, அந்த ஆக்கிரமிப்புக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படுவதாகவே எங்களால் புரிந்துகொள்ளப்படுகிறது,” என தெரிவித்தனர்.
மேலும், இவ்விடயத்தில் சார்பற்ற மற்றும் வெளிப்படையான விசாரணை முன்னெடுக்கப்பட்டு, காணி உரிமை தொடர்பான உண்மை நிலை தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளும் சமமாகக் கேட்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
