வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவன அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.வடமராட்சி கிழக்கின் பல பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவனம் வீதிகளை அகழ்ந்து நன்னீர் குழாய்களை அமைக்கும் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் குடியிருப்பு பகுதிகள் காணப்படும் வீதிகளுக்கு அருகில் வீதிகளை அகழ்ந்து குழாய்களை அமைத்து வருகின்றனர்.குழாய்களை அமைத்த பின் குறித்த வீதிகளை புனர்நிர்மானம் செய்யாமல் அலட்சியமாக விட்டு செல்கின்றனர்.இதனால் வடமராட்சி கிழக்கில் உள்ள பல உள்ளக வீதிகள் பெரும் சேதத்துக்குள்ளாகி பயணிக்க முடியாத நிலையில் உள்ளது.
இந்நிலையில் இன்று (20) உடுத்துறை வேம்படி பகுதியில் எந்த வித அனுமதியும் இன்றி அப்பகுதி மக்களுக்கு உரிய முறையில் அறிவித்தல் வழங்கப்படாமல் கனரக இயந்திரங்களை கொண்டு மக்களின் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் குடி நீர் குழாய் அமைப்பதற்கு பாரிய பள்ளம் தோண்டியுள்ளனர்
வெளியில் சென்ற அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சம்பவம் அறிந்து தமது வீட்டை வந்து பார்வையிட்ட போது சுற்று மதில்கள் சேதமடைந்துள்ளதுடன்,வெடிப்பு விழுந்து காணப்படுவதால் சுற்று மதில்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது.இதனால் கோபமடைந்த மக்கள் முன் அறிவிப்பு இன்றி குறித்த வேலையை செய்ததால் கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கான நன்னீர் திட்ட மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் பரிதாவின் மேற்பார்வையில்தான் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
