தமிழக சட்டசபைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் சென்னைக்கு வருகை தருகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆணையம் பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மத்தியில், மார்ச் 6ஆம் தேதி தமிழ்நாட்டில் 6 இடங்களுக்கு ராஜ்யசபா தேர்தலும் நடைபெற உள்ளது.
சென்னையில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும், 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மூலம் வாக்களிக்கும் முறை மற்றும் வாக்கை உறுதிப்படுத்தும் செயல்முறைகள் குறித்து மாவட்ட அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
