பருத்தித்துறை பகுதியில் இன்று (21.02.2026) நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம் காண்பவர்கள் அனைவரையும் கலங்கடித்தது.2007.02.15 அன்று யாழ்ப்பாணம் கலிகைச் சந்தியில் வைத்து கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் சு. இராமச்சந்திரன் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், கடந்த காலங்களில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி கோரி போராட்டக்காரர்கள் குரல் எழுப்பினர். “நீதி கிடைக்குமா?” என்ற கேள்வி மீண்டும் வலியுறுத்தப்பட்ட நிலையில், சம்பவத்திற்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
போராட்டத்தின் போது சிரேஷ்ட ஊடகவியலாளர் மதிவாணன் கைகளும் கால்களும் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட நிலையில், இரத்தக் கறை படிந்த ஆடை அணிந்து நீதி கோரிய காட்சி பலரையும் கண்கலங்க வைத்தது.

