இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று (22) இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணி 51 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தனது ‘X’ சமூக வலைத்தளப் பதிவில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டதாவது:
“இங்கிலாந்துக்கு எதிரான போட்டி இலங்கை அணிக்குப் சிறப்பான ஆட்டமாக அமையவில்லை. பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட திட்டங்களைத் துல்லியமாக நிறைவேற்றினர். அவர்களின் செயல்பாடு பாராட்டத்தக்கதாக இருந்தது.ஆனால், துடுப்பாட்ட வீரர்கள் எதிர்பார்ப்புக்கு அமைவாக செயல்படவில்லை. துடுப்பாட்டத்தில் தேவையான தன்னம்பிக்கையும் தெளிவும் காணப்படவில்லை. போட்டியின் நிலைமையைப் புரிந்து கொண்டு ஆட வேண்டிய தருணங்களில் தவறான அணுகுமுறை வெளிப்பட்டது.
குறிப்பாக, கமில் மிஷாரவின் துடுப்பாட்டத்தில் காணப்பட்ட முனைப்பும் உறுதியும் இப்போட்டியில் இல்லாதது தெளிவாகப் பட்டது. மேலும், ஆடுகளத்தின் தன்மையையும் போட்டியின் சூழலையும் சரியாக மதிப்பீடு செய்யத் தவறியதே இந்தத் தோல்விக்கான முக்கிய காரணமாக அமைந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் இந்தத் தோல்வி, தொடரின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு சவாலாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
