“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது நாமல் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டாலும், சிறைக்குள் இருந்தே தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற புதிய சரித்திரச் சாதனையை அவர் படைப்பார்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டுக் கட்சி) உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“தற்போது மக்கள் ஆதரவு மீண்டும் எமது பக்கம் திரும்புவதைக் கண்டு அஞ்சும் தரப்பினர், நாமல் ராஜபக்ஷவை அரசியல் ரீதியாக முடக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே அவருக்கு எதிராகச் சதித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
எந்தச் சவாலையும் எதிர்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம். நாமல் ராஜபக்ஷவை சிறையில் அடைத்தாலும், நாம் வெளியில் இருந்து அவருக்காகத் தீவிரமாகச் செயற்படுவோம். ஒருவேளை ஜனாதிபதித் தேர்தல் நடக்கும்போது அவர் சிறையில் இருந்தாலும், மக்கள் ஆதரவுடன் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். இதன் மூலம் சிறையில் இருந்து ஜனாதிபதித் தேர்தலை வென்றவர் என்ற பெருமையை அவர் வரலாற்றில் பதிவு செய்வார்.” – என்றார்.
