Category: சிறுகதை Published Date Hits: 2837
சூரியன் தன் உடல் கிழித்து வெப்பத்தைச் சிந்திக்கொண்டிருந்தான். அவள் கூரையின் ஓட்டை வழி வந்த வெளிச்சத்தை தன் முகத்தில் ஏந்திக்கொண்டிருந்தாள். துர்நாற்றமும் புழுக்களும் ஈக்களுமாய் தன்னைச் சுற்றுவதைத் தவிர்க்க ஏதோ ஒரு வாசனைத் திரவியத்தைத் தெளித்துவிட்டு மீண்டும் யன்னல் வழி தன் பார்வையைச் சுழலவிட்டாள். வியர்வையில்கூட துர்நாற்றம் உரசிப்போகிறது. குழந்தைகளின் சிரிப்பொலி பூக்களைச் சுற்றும் வண்டுகள் பக்கத்து வீட்டை அலசும் பெண்கள் பழைய கனவுகளை மீட்டெடுக்கும் முதியவர்கள் என்று அன்றாட இயல்போடு அன்றைய நாள். அறை மூலையில் ஒரு எலி தன் குஞ்சுக்கு இரை தேடிக்கொண்டிருந்தது. முன்று நாட்களாகக் கிழிக்கப்படாத கலண்டர் சுவரில் காற்றில் அடிபட்டுக்கொண்டிருக்க எலி பயந்து ஓடத்தொடங்கியது. தேநீர் குடிக்க மனம் உந்தியது. ஆனாலும் இருப்பு ஒட்டிக்கிடக்கிறது எழும்ப இயலாமல்.
மெல்ல இருளை வரவேற்று மாலை வெயில் மறைந்திகொண்டிருக்க மெல்லிய கீறலாய் நிலவு வெளிப்பட்டது ஆனாலும் வெளிச்சம் தாராளமாய் இல்லை. இன்னும் யன்னலோடு ஒட்டியபடிதான். எழுதி வைத்த கடிதம் அடிக்கடி தன்னைத் திரும்பிப் பார்க்கவென்று படபடத்துக்கொண்டேயிருக்கிறது.
மெல்ல இருள் விலகத்தொடங்கியிருந்தது. பறவைகள் இரை தேடவும் பசுக்கள் தன் கன்றுகளுக்குப் பால் கொடுக்கவும் தயாராகின்றன. பூக்களின் வாசனை அறையின் துர்நாற்றத்தையும் தாண்டி மனதை இதமாக்குக்கிறது. தூரத்தே ஒரு வீட்டில் ஒரு குழந்தை பள்ளி போக அடம் பிடித்து அழுவதும் கேட்கிறது.
தேநீர் தரவோ கேட்கவோ ஆடகள் இன்றி தாகத்தோடேயே மீண்டும் அதே யன்னல் கம்பிகளூடே ரசிப்பின் நாயகியாய்.இனிமையான காலை நேரப் பாடல்களும் பாடசாலை மாணவர்களுமாய் சாலை கொஞ்சம் நிரம்பியபடி.யாரும் அவள் பக்கம் திரும்பாமலே தங்கள் குறும்புகளோடு சிநேகித முகங்களோடு.இவளுக்குப் பொறாமையாய்கூட.ஏன் இவள் மட்டும் தனிமையில் கவனிப்பாரற்று.
கண்ணீர் யன்னலோரத்துப் புற்களை ஈரமாக்க தன் கைகளை இன்னும் இறுக்கி சூரியனின் வருகையையும் அடுத்த நாளின் ஆரம்பத்தையும் வரவேற்றபடி அவள்.
கதவுகள் எதுவும் திறக்கபடாததால் அறைக்குள் ஒரு இறுக்கம். சூன்யம்போல அமைதி. ஒருமுறை அறை முழுதும் அலைந்து திரும்பவும் யன்னல் கம்பிகளை இறுக்கிக் கொண்டபடி. வெறுமையான சுவரும் கடைசியாகப் பார்த்த அப்பா அம்மாவின் அல்பமும் இன்னும் விரித்தபடி கிடக்கிறது. அவளின் இளமைக்கால நிழலும் எவ்வளவு சந்தோஷமாக அதற்குள். யார் இத்தனை சந்தோஷங்களையும் விழுங்கிக் கொண்டது.
ஏன் எல்லாம் அவள் அறையில் அசைவற்றுக் கிடக்கின்றன. சமையல் பாத்திரங்கள் கழுவப்படவில்லை. தொலைபேசி அலறவில்லை. தண்ணீரின் சலசலப்போ வானொலிச் சத்தமோ இல்லை. குளியல் அறையில் மாத்திரம் ஒரு துளி நீர் சொட்டும் சத்தம். ஓ...அது இறுக்கப் பூட்டப்படாத குழாயின் கூப்பிடு குரல்.
ம்....மெல்லக் கதவு திறந்து மூடுகிறது. யாரோ அறை உடைத்து முன்னேறப் பார்க்கிறார்கள். உறவின் இரைச்சல்கள் அழுகையாய் ஆர்ப்பாட்டமாய் இரக்கமாய் அருகே கேட்கிறது.
இவர்கள் அவள் அறை துழாவத் தொடங்கிவிட்டார்கள். அவள் இருப்பின் அடையாளங்கள் ஒவ்வொரு துகளிலும் இங்கு கிடக்கப் புறப்படுகிறது காற்றாய் அவள் கைகளும் கால்களும். உடல் அது உடல் அல்ல. வெறும் காற்றாய் அந்தர ஊஞ்சலாய். கதவுகள் திறக்கப்பட்டதால் சுலபமாய் வெளியேற யன்னல் கமபிகளின் வியர்வைப் பிடியிலிருந்து மெதுவாய் வெளியே மெல்ல. சுலபமாய் இருக்கிறதே இப்போ உள்நுழையவும் வெளியேறவும்.
இப்போ அந்த யன்னலின் பின்பக்கமாய் அவள். இன்னும் யார் யாரோ உள்நுழைய விம்மல் சத்தங்களினூடே அதட்டல் குரல்களும்.
இரன்டு நாட்களுக்கு முதல் தனிமையின் விரட்டல் அதிகரிக்க தலை தடவவோ கைகளை இறுக்கிப் பற்றவோ எவருமின்றி, உதிர உறவுகளை செய்திகள் வெளியேற்ற உச்சி வெயில் வெப்பியெழ இவளும் பைத்தியமானாள்.
கச்சிதமாகத் தனக்குப் பிடித்த உடையணிந்து அலங்கரித்தபடியே படுத்திருந்தாள். அவஸ்தையான வாழ்வு, தனிமை, சிறுவர்களின் பசிக் குரல்கள், பிடிக்காத செய்திகள். தன்னைத் தானே சூறையாடிய அந்த மயக்க மருந்துகள். சொக்கிப் போகும் நிமிஷத்திலும் தான் விளையாடிய அந்த முற்றம், மண்திண்ணை, ஒற்றைப்பனை. மயங்கிவிட்டாள். மிஞ்சிக் கிடக்கும் உடலைத்தான் பார்த்து அழுகிறார்கள். எங்கே போனார்கள் இத்தனை நாளும் இவர்கள்!
உடல் புரட்டி உடை தளர்த்தினாலும் கேள்விகளும் பதில்களும் நிரம்பி வழிந்தன.
ஏன் என்ன நடந்தது ? !!!
பரீட்சையில் தோல்வியோ...இல்லையே இப்போ பரீட்சைக் காலமில்லையே இரண்டு நாளைக்கும் முன்னமும் பார்த்தேனே தொலைபேசியோடு. நானும் கண்டேனே அடுத்த தெருப் பையனோடு யாரோ ஒருத்தியும் இங்க அடிக்கடி வருவாளே. அவளை இப்போதைக்குக் காணவில்லை நான். என்னதான் எழுதியிருக்காம் அதில.காட்டவே மாட்டார்களாம். படிக்கவோ வேலைக்கோதானே இங்க தங்கியிருக்கிறாள்.
அதில்கூட அவர்களுக்கு முழுமையான விபரம் இல்லை.ஏன் எதற்கு யார் எங்கே எதுவுமே தெரியாது. ஆனாலும் வாய் அவிழ்ந்து புழுவாய்ப் பொய்த்துக் கொட்டுகிறது. அந்த நாற்றத்தைத் தாண்டி அவர்களின் பேச்சு காற்றோடு கலக்கிறது. தனிமையும் உறவுகளின் பிரிவும்தான் அவள் மனதை இறுக்கியது என்று. எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத வெறுமை. தொலைபேசியோடான சிநேகம்,கணணியோடான அளவலாவல், அத்தனைக்கும் தூரமான அவள் தேசம்.
அகற்றப்பட்ட அல்பமும் கடிதமும் கலண்டரும். இப்போ நாற்றம் இல்லை. அத்தனை கதவுகளும் யன்னலும் திறக்கப்பட்டு மாலையும் காலையும் வெளிச்சம் உள்நுழைந்து வெளியேறிக்கொண்டிருந்தது. இயல்பு வாழ்வு இயல்பாபகவே நகர்கிறது. குழந்தைகளும் பூக்களும் அப்படியேதான்.சில சமயங்களில் மாத்திரம் சூன்யமாய் வெறித்த பார்வையோடு சிலர் அந்த அறையையைப் பார்க்கிறார்கள். வாழ்வேண்டிய வாழ்வைச் சூறையாடிய சந்தோஷத்தில் அந்தத் தினம். நகர்வுகள் இயல்பானானாலும் பாரம் சுமந்த சில மனங்கள். அவளின் உடல் இல்லாமல் போய் ஒரு வாரமாகியிருந்தது. அந்தச் சுற்றாடலில் எல்லோரும் அவளை - அந்தச் சம்பவத்தை மெல்ல மெல்ல மறக்கத் தொடங்கியிருந்தார்கள்.
ஹேமா
சுவீஸ்